Saturday, February 19, 2011

நடுநிசி

காலையில் 
விட்டுச் சென்ற
மிச்சமாய் 
நீ கட்டிலில்!
உன் வளைவு நெளிவுகளை 
கடந்து சென்ற
காற்றாய் 
நான் கலக்கத்தில்!


பாதம் முதல்! 
தலை வரை! 
முத்தத்தால்
என்னை அளவிடு! 
கழுத்து பகுதியில் 
இளைப்பாறி
கொஞ்சம் கடித்துவிடு!

உன் உடலில்   
தெளிவாய்த் தெரிகிறது 
நேற்று நான் துறந்த 
சிறு முடிகள்!
என் கைரேகைகளின் 
முகவரிகள்!      

நிலா ஒளியில் 
குளிர்க்காயுது பறவையின் 
கூடு!
கார் இரவில் 
நடுங்குது உயிர் என்னோடு நீ
கூடு!

"உன்னை விடுத்து!
என்னை உடுத்து!"
அழைக்கிறாய் நீ!
என்னை
துறக்கிறேன் நான்!

துறவு பூணுவது 
சுகமென அறிகிறேன்!
உன்னோடு சேர்ந்து 
துறவியாய்ப் போகிறேன்!

என்
கண்கள் 
மட்டுமல்ல 
கனவுகளும் 
உன்னக்குள்ளே 
புதைந்துப் போகிறது!

மேலும் கீழுமாக 
மாறுகிறோம்!
"நான் கீழும் 
நீ மேலும்"
எனத் தீர்ப்பெலுதுகிறோம்! 

உறங்கும் வரை
என்னோடு உரையாடுவாய்!
உறங்கிய பின்னும் 
என்னோடு உறவாடுவாய்!
  
களைந்துப் போனாலும் 
களைத்துப் போகமாட்டாய்! 
விலகிப் போனாலும்
விரல் தொடும் தூரத்தில் கிடப்பாய்!  

விடிந்ததும் 
உன்னை விலக்கி
எழுந்துப் போகிறேன்!                 
கட்டிலில்
நீ களைந்துக் கிடப்பதை
கண்டுகொள்ளாமல் போகிறேன்!

ஆம் 
தினமும் காலையில்
நான்  போர்வையை
மடித்து வைப்பதில்லை!
மறந்துப் போகிறேன்!